Tamil Bayan Points

அருள் வளம் (பரக்கத்) பெறுவது எப்படி?

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 1

Last Updated on October 18, 2023 by Trichy Farook

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! இஸ்லாம் என்பது இறைவனால் மனித குலத்திற்கு அருட்கொடையாக வழங்கப்பட்ட மார்க்கம். இந்த மார்க்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம்களாகிய நமக்கு இறைவன் வழங்கி இருக்கிற அருட்கொடைகளில் ஒன்றான பரக்கத்தைப் பற்றியும், அதனை பெறுவதைப் பற்றியும் இந்த உரையிலே பார்க்க இருக்கிறோம்.

அபிவிருத்தியின் அவசியம்

இவ்வுலுகில் வாழ்வதற்கு எத்தனையோ வழிகள் இருக்கின்றன. அதில் ஏதாவது ஒரு வழியை பின்பற்றி மனிதன் வாழ்ந்து கொண்டிருக்கிறான். ஆனால் எல்லாருடைய வாழ்விலும் மகிழ்ச்சி நிலைத்திருப்பதில்லை. வரும் வருமானம் போதுமானதாக இருப்பதில்லை. எவ்வளவு சம்பாதித்தாலும் கடன் இல்லாமல் இருப்பதில்லை. இப்படி ஏராளமானோர் வாழ்ந்து வருகின்றனர்.

நம் வாழ்வில் இந்த குறைகளை இல்லாமல் ஆக்குவதற்கு என்ன வழி முறை இருக்கிறது. இந்த குறையை எவ்வாறு போக்குவது? படைத்தவனின் உதவியின்றி இக்குறையை போக்க முடியாது. அவனின் அருள்வளம் (பரக்கத்) நமக்கு கிடைத்துவிட்டால் நம் வாழ்வில் நன்மையை காணலாம். இறைவனின் மறைமுகமான அந்த அருள்வளம் (பரக்கத்) கிடைப்பதற்குரிய வழி என்ன? அவனின் பரக்கத் கிடைக்காமல் போவதற்குரிய வழி என்ன? என்பதை அறிந்தால் பரக்கத்தை நிரந்தரமாக்கிக் கொள்ள நாம் முயற்சிக்கலாம். இதற்கு மக்களிடம் இருக்கும் வழிமுறைகள் என்ன? நபிகளார் காட்டிய வழி முறைகள் என்ன?

அருள்வளம் (பரக்கத்) வேண்டுவோர் நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் உள்ள கல்வத் ஆண்டவரிடம் போய் அவரிடம் ஆயிரமோ, இரண்டாயிரமோ கொடுப்பார்கள். அவர் அதனை வாங்கி கொண்டு அவர் ஐம்பது பைசா காசை லேமினேஷன் செய்து கொடுத்து இதை உமது கல்லாப்பெட்டியிலோ, அல்லது உமது பீரோவிலோ வை! இதனால் உமக்கு அருள்வளம் உண்டாகும் என்று சொல்வார்.

இதனை வாங்கி கொண்டு கல்லாப்பெட்டியிலோ, அல்லது பீரோவிலோ வைத்து அபிவிரித்தியை எதிர்பார்க்க கூடிய காட்சியைப் பார்க்கிறோம். இன்னும் சிலர் பரக்கத் பெறுவதற்காக தாயத்து, தகடுகளை வீட்டில் அல்லது கடைகளில் தொங்க விடுவதையும் பார்க்கிறோம்.

இன்னும் சிலர் வீட்டில் ஸலவாத் நாரியா, மவ்லித் போன்றவைகளை ஓதுவதையும் பார்க்கிறோம். இன்னும் சிலர் ஆயத்துல் குர்ஸியை கடையில் தொங்கவிடுவதையும் பார்க்கிறோம். இந்த சமுதாயத்தில் இந்த மூடநம்பிக்கைகள் ஏற்பட காரணம் பரக்கத் ஏற்பட என்ன செய்ய வேண்டும் என்பதை சொல்லி கொடுக்காததுதான்.

ஆகையால் நாம் அருள்வளம் பெறுவது எப்படி என்பதையும், நமக்கு அருள்வளம் தடை செய்யும் காரியங்கள் எவை என்பதையும் தெரிந்து கொள்ளுவோம்.

உண்மையாக இருத்தல்

நாம் செய்யும் வியாபாரத்தில் பொருள்களின் சரியான தரத்தை சொல்லி விற்கவேண்டும். பொருள்களில் குறைநிறைகளை சொல்லி விற்க வேண்டும். அப்படி சொல்லி விற்கும்போது நமது வியாபாரத்தில் அருள்வளம் உண்டாகும். குறைகளை மறைத்தும், சரியான தரத்தை சொல்லாமலும் விற்கும் போது நமது பொருளில் அருள்வளம் எடுக்கப்பட்டு விடும்.

 قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم :
الْبَيِّعَانِ بِالْخِيَارِ مَا لَمْ يَتَفَرَّقَا ، أَوْ قَالَ حَتَّى يَتَفَرَّقَا – فَإِنْ صَدَقَا وَبَيَّنَا بُورِكَ لَهُمَا فِي بَيْعِهِمَا وَإِنْ كَتَمَا وَكَذَبَا مُحِقَتْ بَرَكَةُ بَيْعِهِمَا.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
விற்பவரும் வாங்குபவரும் பிரியாமலிருக்கும் வரை வியாபாரத்தை முறித்துக்கொள்ளும் உரிமை இருவருக்கும் உண்டு! அவ்விருவரும் உண்மை பேசிக் குறைகளைத் தெளிவுபடுத்தியிருந்தால் அவர்களுடைய வியாபாரத்தில் அருள்வளம் (பரக்கத்) அளிக்கப்படும்! குறைகளை மறைத்துப் பொய் சொல்லியிருந்தால் அவர்களின் வியாபாரத்தில் உள்ள அருள்வளம் நீக்கப்படும்!

அறி : ஹகீம் பின் ஹிஸாம் (ரலி)
நூல்: புகாரி-2079 

இன்று முஸ்லிம்களில் பலரும் இந்த காரியங்களை செய்து வருவதால் முஸ்லிம்களுக்கு கிடைக்கூடிய பொருளாதாரத்தில் அபிவிரித்தி எடுக்கப்பட்டு விடுகிறது.

போதுமான அளவு சம்பாதித்தல்

இஸ்லாம் சம்பாதிப்பதையும், அதிகமாக பொருள்தேடுவதையும் தடுக்க வில்லை. ஆனால் வியாபாரம் செய்யும்போது நிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற பேராசை இருக்கக்கூடாது. இதை ஏன் நாம் சொல்கிறோம் என்றால் அதிக பேராசை இருக்கும் போதுதான் ஹராமான வேலைகளையும் பொய் சத்தியத்தையும், குறைகளை மறைத்தும் வியாபாரம் செய்ய முனைந்து விடுகிறோம்.

أَنَّ حَكِيمَ بْنَ حِزَامٍ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ :
سَأَلْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم فَأَعْطَانِي ثُمَّ سَأَلْتُهُ فَأَعْطَانِي ثُمَّ سَأَلْتُهُ فَأَعْطَانِي ثُمَّ قَالَ يَا حَكِيمُ إِنَّ هَذَا الْمَالَ خَضِرَةٌ حُلْوَةٌ فَمَنْ أَخَذَهُ بِسَخَاوَةِ نَفْسٍ بُورِكَ لَهُ فِيهِ ، وَمَنْ أَخَذَهُ بِإِشْرَافِ نَفْسٍ لَمْ يُبَارَكْ لَهُ فِيهِ كَالَّذِي يَأْكُلُ ، وَلاَ يَشْبَعُ الْيَدُ الْعُلْيَا خَيْرٌ مِنَ الْيَدِ السُّفْلَى قَالَ حَكِيمٌ ، فَقُلْتُ : يَا رَسُولَ اللهِ وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ لاَ أَرْزَأُ أَحَدًا بَعْدَكَ شَيْئًا حَتَّى أُفَارِقَ الدُّنْيَا فَكَانَ أَبُو بَكْرٍ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، يَدْعُو حَكِيمًا إِلَى الْعَطَاءِ فَيَأْبَى أَنْ يَقْبَلَهُ مِنْهُ ثُمَّ إِنَّ عُمَرَ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، دَعَاهُ لِيُعْطِيَهُ فَأَبَى أَنْ يَقْبَلَ مِنْهُ شَيْئًا فَقَالَ عُمَرُ إِنِّي أُشْهِدُكُمْ يَا مَعْشَرَ الْمُسْلِمِينَ عَلَى حَكِيمٍ أَنِّي أَعْرِضُ عَلَيْهِ حَقَّهُ مِنْ هَذَا الْفَيْءِ فَيَأْبَى أَنْ يَأْخُذَهُ فَلَمْ يَرْزَأْ حَكِيمٌ أَحَدًا مِنَ النَّاسِ بَعْدَ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم حَتَّى تُوُفِّيَ.

ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களிடம் (உதவி) கேட்டேன். அவர்கள் எனக்கு வழங்கினார்கள்; மீண்டும் (உதவி) கேட்டேன் வழங்கினார்கள். மீண்டும் கேட்டேன்; வழங்கிவிட்டு, “ஹகீமே! நிச்சயமாக இந்தச் செல்வம் பசுமையானதும் இனிமையானதுமாகும்.

யார் இதைப் போதுமென்ற உள்ளத்துடன் எடுத்துக்கொள்கிறாரோ அவருக்கு இதில் வளம் ஏற்படுத்தப்படும்; யார் இதைப் பேராசையுடன் எடுத்துக்கொள்கின்றாரோ அவருக்கு இதில் வளம் ஏற்படுத்தப்படாது. அவன் உண்ட பின்பும் வயிறு நிரம்பாதவன் போலாவான். உயர்ந்த கை தாழ்ந்த கையைவிடச் சிறந்தது” என்று கூறினார்கள்.

நூல்: புகாரி-1472 

போதுமென்ற மனமே…

அடுத்து நமக்கு வந்த செல்வங்களில் திருப்தியையும், போதுமென்ற மனத்தையும் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

أَنَّ اللَّهَ يَبْتَلِي عَبْدَهُ بِمَا أَعْطَاهُ ، فَمَنْ رَضِيَ بِمَا قَسَمَ اللَّهُ لَهُ ، بَارَكَ اللَّهُ لَهُ فِيهِ ، وَوَسَّعَهُ ، وَمَنْ لَمْ يَرْضَ لَمْ يُبَارِكْ لَهُ.

அல்லாஹ் தன்னுடைய அடியானுக்கு கொடுத்த பொருளில் சோதனை செய்கிறான். யார் அல்லாஹ் கொடுத்ததை பொருந்திக்கொள்கிறாரோ அவருக்கு அதில் பரக்கத் செய்கிறான். யார் அல்லாஹ் கொடுத்ததில் திருப்தி கொள்ளவில்லையோ அதில் அல்லாஹ் பரக்கத் செய்வதில்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: அஹ்மத்-20279 (19398)

பிறரிடம் கேட்டு வாங்குதல்

சுய மரியாதையையும், சம்பாதிப்பதையும் கற்று கொடுத்த இஸ்லாத்தில் இன்று மாற்று மதத்தவர்களை மிஞ்சும் அளவிற்கு கோவில்களிலும் பள்ளிகளிலும் தெருக்களிலும் எங்கு பார்த்தாலும் ஒரு தொப்பியையும், ஒரு புர்காவையும் அணிந்து கொண்டு யாசகம் கேட்கிறார்கள்.

இவர்கள் ஆயிரக்கணக்கில் சம்பாதித்து பேங்கில் அக்கவுண்ட் திறக்கும் அளவிற்கும், பிறருக்கு வட்டிக்கு கடன் கொடுக்கும் அளவிற்கு பணத்தை திரட்டுகிறார்கள். ஆனால் அதில் பரக்கத் எடுபட்டதின் காரணமாக காலம் காலமாக அதே தொழிலை செய்து வருகிறார்கள்.

قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم-
لاَ تُلْحِفُوا فِى الْمَسْأَلَةِ فَوَاللَّهِ لاَ يَسْأَلُنِى أَحَدٌ مِنْكُمْ شَيْئًا فَتُخْرِجَ لَهُ مَسْأَلَتُهُ مِنِّى شَيْئًا وَأَنَا لَهُ كَارِهٌ فَيُبَارَكَ لَهُ فِيمَا أَعْطَيْتُهُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தர்மம் கேட்டு (என்னை) நச்சரிக்காதீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களில் ஒருவர் என்னிடம் ஏதேனும் (தர்மம்) கேட்டு, அதை நான் வெறுத்த நிலையில் அவர் என்னிடம் கேட்டது அவருக்குக் கிடைத்தால், அதில் அவருக்கு வளம் வழங்கப்படுவதில்லை.

இதை முஆவியா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல்: முஸ்லிம்-1877 (1887)

தர்மம் செய்தல்

நாம் சம்பாதிப்பதை நாமே அனுவிப்பதை விட்டு விட்டு தான தர்மங்களையும், கடமையான தர்மங்களையும் செய்ய வேண்டும். இறைக்க இறைக்கத் தான் ஊரும் என்று சொல்வார்கள். அதனடிப்படையில் நாம் அதிகம் தர்மங்களை செய்ய வேண்டும். அப்படி தர்மங்கள் செய்யும் போது அதில் அல்லாஹ் பரக்கத் செய்வான். தர்மம் செய்யும்போது கூட நம்முடைய தர்மங்களை அழிக்கும் வேலைகளில் ஈடுபட்டு விடக்கூடாது.

مَثَلُ الَّذِيْنَ يُنْفِقُوْنَ اَمْوَالَهُمْ فِىْ سَبِيْلِ اللّٰهِ كَمَثَلِ حَبَّةٍ اَنْۢبَتَتْ سَبْعَ سَنَابِلَ فِىْ كُلِّ سُنْۢبُلَةٍ مِّائَةُ حَبَّةٍ‌ؕ وَاللّٰهُ يُضٰعِفُ لِمَنْ يَّشَآءُ‌ ؕ وَاللّٰهُ وَاسِعٌ عَلِيْمٌ‏

தமது செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவிடுவோருக்கு உதாரணம் ஒரு தானியம். அது ஏழு கதிர்களை முளைக்கச் செய்கிறது. ஒவ்வொரு கதிரிலும் நூறு தானியங்கள் உள்ளன. தான் நாடியோருக்கு அல்லாஹ் இன்னும் பன் மடங்காகக் கொடுக்கிறான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.

(அல்குர்ஆன்: 2:261)

 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تُبْطِلُوْا صَدَقٰتِكُمْ بِالْمَنِّ وَالْاَذٰىۙ كَالَّذِىْ يُنْفِقُ مَالَهٗ رِئَآءَ النَّاسِ وَلَا يُؤْمِنُ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ‌ؕ فَمَثَلُهٗ كَمَثَلِ صَفْوَانٍ عَلَيْهِ تُرَابٌ فَاَصَابَهٗ وَابِلٌ فَتَرَكَهٗ صَلْدًا ‌ؕ لَا يَقْدِرُوْنَ عَلٰى شَىْءٍ مِّمَّا كَسَبُوْا ‌ؕ وَاللّٰهُ لَا يَهْدِى الْقَوْمَ الْـكٰفِرِيْنَ‏

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாது மக்களுக்குக் காட்டுவதற்காக தனது செல்வத்தைச் செலவிடுபவனைப்போல், உங்கள் தர்மங்களைச் சொல்லிக் காட்டியும், தொல்லை தந்தும் பாழாக்கி விடாதீர்கள்!

இவனுக்கு உதாரணம் மேலே மண் படிந்திருக்கும் வழுக்குப் பாறை. அதன் மேல் மழை விழுந்ததும் மேலே ஒன்றுமில்லாமல் ஆக்கி விடுகிறது. தாம் பாடுபட்ட எதன் மீதும் அவர்கள் சக்தி பெறமாட்டார்கள். (தன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்டமாட்டான்.

(அல்குர்ஆன்: 2:264)

நன்றி செலுத்துதல்

நாம் செய்யக்கூடிய தர்மங்களோடு நாம் செய்யும் காரியங்களை நிறுத்தி விடக்கூடாது. நமக்கு செல்வம் கிடைத்ததற்காக ஒவ்வொரு நேரமும் அல்லாஹ்விற்காக நன்றியும் செலுத்த வேண்டும்.

அல்லாஹ் நமக்கு வழங்கியவற்றிக்காக நன்றி செலுத்தும் போது அதில் நமக்கு பரக்கத் செய்வான். எப்போது நாம் நன்றி செய்ய மறந்து விடுகிறோமோ அப்போது பரகத்தை தடை செய்வது மட்டுமில்லாமல் வேதனையும் வந்து விடும். இருக்கிற செல்வமும் பறிபோய் விடும் நிலை ஏற்படும்.

وَاِذْ تَاَذَّنَ رَبُّكُمْ لَٮِٕنْ شَكَرْتُمْ لَاَزِيْدَنَّـكُمْ‌ وَلَٮِٕنْ كَفَرْتُمْ اِنَّ عَذَابِىْ لَشَدِيْدٌ‏

“நீங்கள் நன்றி செலுத்தினால் உங்களுக்கு அதிகமாக வழங்குவேன். நீங்கள் நன்றி மறந்தால் எனது வேதனை கடுமையானது” என்று உங்கள் இறைவன் பிரகடனம் செய்ததை எண்ணிப் பாருங்கள்!

(அல்குர்ஆன்: 14:7)

நன்றி மறக்கும்போது வேதனை வரும் என்பதை எடுத்துக்காட்டுவதைப்போல் குர்ஆனில் ஒரு ஊரின் சம்பவத்தை சொல்லிக்காட்டுகிறான்.

وَضَرَبَ اللّٰهُ مَثَلًا قَرْيَةً كَانَتْ اٰمِنَةً مُّطْمَٮِٕنَّةً يَّاْتِيْهَا رِزْقُهَا رَغَدًا مِّنْ كُلِّ مَكَانٍ فَكَفَرَتْ بِاَنْعُمِ اللّٰهِ فَاَذَاقَهَا اللّٰهُ لِبَاسَ الْجُـوْعِ وَالْخَـوْفِ بِمَا كَانُوْا يَصْنَعُوْنَ

ஓர் ஊரை அல்லாஹ் முன்னுதாரணமாகக் கூறுகிறான். அது நிம்மதியுடனும், அமைதியுடனும் இருந்தது. ஒவ்வொரு இடத்திலிருந்தும் அவ்வூருக்குரிய உணவு தாராளமாக வந்து சேர்ந்தது. ஆனால் அவ்வூர் அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றி மறந்தது. எனவே அவர்கள் செய்து கொண்டிருந்ததன் காரணமாக பசி மற்றும் பயம் எனும் ஆடையை அல்லாஹ் அவ்வூருக்கு அணிவித்தான்.

(அல்குர்ஆன்: 16:112)

ஹதீஸில் இடம்பெற்ற மற்றொரு சம்பவத்தை பாருங்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பனூ இஸ்ராயீல் குலத்தாரில் மூன்று பேர்: (ஒருவர்) தொழுநோய் பிடித்தவராகவும் (மற்றொருவர்) வழுக்கைத் தலையராகவும் (இன்னொருவர்) குருடராகவும் இருந்தனர். அல்லாஹ் அவர்களை சோதிக்க நாடி வானவர் ஒருவரை அவர்களிடம் அனுப்பினான். அவர் தொழுநோயாளியிடம் வந்து, “உனக்கு மிகவும் விருப்பமானது எது?” என்று கேட்க அவர், “நல்ல நிறம், நல்ல தோல் (தான் எனக்கு மிகவும் விருப்பமானவை). மக்கள் (என் வியாதியின் காரணத்தால்) என்னை அருவருக்கிறார்கள்” என்று சொன்னார்.

உடனே அவ்வானவர் அவரை (தம் கரங்களால்) தடவ அந்த வியாதி அவரை விட்டுச் சென்றுவிட்டது. அவருக்கு அழகிய நிறமும் அழகிய தோலும் தரப்பட்டன. பிறகு அவ்வானவர், “எந்தச் செல்வம் உங்களுக்கு மிகவும் விருப்பமானது?” என்று கேட்க அவர், “ஒட்டகம் தான்… (என்றோ) அல்லது மாடு தான்.. .(எனக்கு மிகவும் விருப்பமானதாகும்)” என்று பதிலளித்தார். கருத்தரித்த ஒட்டகம் அவருக்கு கொடுக்கப்பட்டது. அவ்வானவர், “இதில் உனக்கு பரக்கத் (வளர்ச்சி) வழங்கப்படும்” என்று சொன்னார்.

பிறகு அவ்வானவர் வழுக்கைத் தலையரிடம் சென்றார். “உனக்கு மிகவும் விருப்பமானது எது?” என்று கேட்டார். அவர், “அழகான முடியும் இந்த வழுக்கை என்னை விட்டுப் போய் விடுவதும்தான் (எனக்கு மிகவும் விருப்பமானது.) மக்கள் என்னை அருவருத்து (ஒதுக்கி வைத்து) விட்டார்கள்” என்று சொன்னார். உடனே அவ்வானவர், அவரது தலையைத் தடவிக் கொடுக்க, அவருக்கு அழகான முடி வழங்கப்பட்டது.

அவ்வானவர், “எந்தச் செல்வம் உனக்கு விருப் பமானது?” என்று கேட்டார். அவர், “மாடு தான் எனக்கு மிக விருப்பமான செல்வம்” என்று சொன்னார். உடனே வானவர் அந்த வழுக்கைத் தலையருக்கு கர்ப்பமான மாடு ஒன்றைக் கொடுத்து, “இதில் உனக்கு வளர்ச்சி வழங்கப்படும்” என்று சொன்னார்.

பிறகு, அவ்வானவர் குருடரிடம் சென்று, “உனக்கு மிகவும் விருப்பமானது எது?” என்று கேட்டார். அவர், “அல்லாஹ் என் பார்வையை எனக்குத் திரும்பச் செய்வதும் அதைக் கொண்டு மக்களை நான் பார்ப்பதும் தான் (எனக்கு மிகவும் விருப்பமானது)” என்று பதிலளித்தார். அவ்வானவர் அவரைத் தடவிட, அல்லாஹ் அவருக்கு அவரது பார்வையைத் திருப்பித் தந்தான்.

அவ்வானவர், “உனக்கு எந்தச் செல்வம் விருப்பமானது?” என்று கேட்க அவர், “ஆடு தான் (எனக்கு மிகவும் விருப்பமானது)” என்று பதில் அளித்தார். உடனே, அவ்வானவர் அவருக்குக் கருவுற்றஆடு ஒன்றைக் கொடுத்தார். அந்த இருவரும் (ஒட்டகம் வழங்கப்பட்டவரும் மாடு வழங்கப்பட்டவரும்) நிறைய குட்டிகள் ஈந்திடப் பெற்றனர். இவர் (ஆடு வழங்கப்பட்டவர்) நிறையக் குட்டிகள் பெற்றார். தொழு நோயாளியாய் இருந்தவருக்கு ஒரு கணவாய் நிரம்ப ஒட்டகங்களும் வழுக்கைத் தலையராய் இருந்தவருக்கு ஒரு கணவாய் நிரம்ப மாடுகளும், குருடராக இருந்தவருக்கு ஒரு கணவாய் நிரம்ப ஆடுகளும் (பெருமளவில்) கிடைத்தன.

பிறகு அவ்வானவர் தொழு நோயாளியாய் இருந்தவரிடம் தமது பழைய தோற்றத்திலும் அமைப்பிலும் சென்று, “நான் ஓர் ஏழை மனிதன். என் பயணத்தில் என் வாழ்வாதாரம் அறுபட்டு விட்டது. (செலவுக்குப் பணம் தீர்ந்து போய்விட்டது.) இன்று உதவிக்கான வழி வகை (எனக்கு) அல்லாஹ்வையும் பிறகு உன்னையும் தவிர வேறெவருமில்லை. உனக்கு அழகிய நிறத்தையும் அழகிய தோலையும் செல்வத்தையும் கொடுத்த(இறை)வனின் பெயரால் உன்னிடம் ஓர் ஒட்டகத்தைக் கேட்கின்றேன். அதன் வாயிலாகப் பயணத்தில் நான் போக வேண்டிய இடத்தைச் சென்றடைவேன்” என்று சொன்னார். அதற்கு அந்த மனிதர், “(எனக்குக்) கடமைகள் நிறைய இருக்கின்றன. (எனவே, என்னால் நீ கேட்டதைத் தர முடியாது)” என்றார்.

உடனே அவ்வானவர், “உன்னை எனக்குத் தெரியும் போலுள்ளதே. மக்கள் அருவருக்கின்றதொழு நோயாளியாக நீ இருக்கவில்லையா? நீ ஏழையாக இருக்கவில்லையா? பிறகு அல்லாஹ் உனக்கு (செல்வத்தைக்) கொடுத்தான் அல்லவா?” என்று கேட்டார். அதற்கு அவன், “(இல்லையே; நான் இந்த அழகான நிறத்தையும் தோலையும் மற்றும் திரண்ட இந்தச் செல்வத்தையும்) வாழையடி வாழையாக (என் முன்னோர்களிடமிருந்து) வாரிசாகப் பெற்றேன்” என்று பதிலளித்தான்.

உடனே அவ்வானவர், “நீ (இக்கூற்றில்) பொய்யனாயிருந்தால் நீ முன்பு எப்படி இருந்தாயோ அப்படியே உன்னை அல்லாஹ் மாற்றி விடட்டும்” என்று சொன்னார். பிறகு வழுக்கைத் தலையரிடம் தமது (பழைய) தோற்றத்திலும் அமைப்பிலும் வந்து முன்பு இவரிடம் (தொழு நோயாளியிடம்) சொன்னதைப் போன்றே சொன்னார். அவனும் முதலாமவன் அவருக்கு பதிலளித்ததைப் போன்றே பதிலளித்தான்.

வானவரும், “நீ (உன் கூற்றில்) பொய்யனாயிருந்தால் நீ முன்பு எப்படியிருந்தாயோ அப்படியே உன்னை அல்லாஹ் மாற்றி விடட்டும்” என்று சொன்னார். பிறகு (இறுதியாக), குருடரிடம் தமது தோற்றத்திலும் அமைப்பிலும் வந்து, “நான் ஓர் ஏழை மனிதன்; வழிப்போக்கன். என் வாழ்வாதாரம் (வழிச் செலவுக்கான பணம்) தீர்ந்துபோய் விட்டது. இன்று உதவிக்கான வழிவகை (எனக்கு) அல்லாஹ்வையும், பிறகு உன்னையும் தவிர வேறெவருமில்லை. என் பயணத்தில் என் தேவையைத் தீர்த்துக் கொள்ள உதவும் ஆடு ஒன்றைத் தரும்படி உனக்குப் பார்வையைத் திரும்பத் தந்தவன் பெயரால் கேட்கின்றேன்” என்று சொன்னார்.

(குருடராயிருந்து பார்வை பெற்ற) அந்த மனிதர் வானவரிடம், “நான் குருடனாகத்தான் இருந்தேன். அல்லாஹ் என் பார்வையைத் திருப்பித் தந்தான். நான் ஏழையாக இருந்தேன்; என்னைச் செல்வந்தனாக்கினான். ஆகவே, நீ விரும்புவதை எடுத்துக் கொள். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இன்று நீ எடுக்கின்ற எந்தப் பொருளையும் திருப்பித் தரும்படி அல்லாஹ்விற்காக சிரமப்படுத்த மாட்டேன்.” என்று சொன்னார்.

உடனே அவ்வானவர், “உன் செல்வத்தை நீயே வைத்துக் கொள். இது உங்களைச் சோதிப்பதற்காகத் தான். அல்லாஹ் உன்னைக் குறித்து திருப்தியடைந்தான். உன் இருதோழர்கள் (தொழு நோயாளி மற்றும் வழுக்கைத் தலையன்) மீது கோபம் கொண்டான்” என்று சொன்னார்.

அறி : அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி-3464 

செலவில் சிக்கனம்

நாம் சம்பாதிக்கும் செல்வங்களை கரியாக்கிடாமலும், வீண்விரையத்தில் ஈடுபடாமலும் இருக்க வேண்டும். இன்று பெரும்பாலோர் ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள். ஆனால் அது எப்படி வந்தது? எப்படி போனது? என்று தெரியாமல் திருதிருவென்று முழிப்பார்கள்.

நாம் செய்யும் காரியங்களில் திருமண நிகழ்ச்சியில் என்ன நடந்து கொண்டிருக்கிறது. ஆயிரக்கணக்கில் செலவழித்து மண்டபங்களையும், விருந்துகளையும் ஏற்பாடு செய்கிறார்கள். இப்படி நடத்தப்படுகின்ற திருமணங்களில் இன்று ஆயிரம் பிரச்சினைகள் கணவன் மனைவிக்கு மத்தியில் ஏற்படுகிறது. காரணம் பரக்கத் இல்லாமல் போய்விடுகின்றது.

 أن رسول الله صلى الله عليه و سلم قال :
إِنَّ أَعْظَمَ النِّكَاحِ بَرَكَةً أَيْسَرُهُ مَؤُونَةً

நபி (ஸல்) அவர்கள் குறைந்த செலவில் நடத்தப்படுகின்ற திருமணமே மிகவும் பரகத் பொருந்தியது என்று கூறினார்கள்.

நூல்: . அஹ்மத்-24529 (23388)

நாம் செய்யும் வியாபாரங்களில் பரகத் பெறுவது எப்படி என்று நாம் பார்த்து வந்தோம். இந்த வியாபாரம் இன்றி இன்னும் சில காரியங்கள் மூலம் பரகத் கிடைப்பதாக அல்லாஹ்வும் அவனது தூதரும்
காட்டித் தந்திருக்கிறார்கள்.

பகராவை ஓதுதல்

பரகத் பெருவதற்காக மார்க்கத்தில் இல்லாதவற்றையெல்லாம் நடைமுறைப் படுத்துகிறோம். ஷிர்க்கான காரியத்தையும் செய்கிறோம். அதற்கு பதிலாக நமது வீடுகளில் நபி (ஸல்) அவர்கள் கற்றுந்தந்த இதுபோன்ற சூராக்களை நடைமுறைப்படுத்தலாம்.

اقْرَءُوا الْقُرْآنَ فَإِنَّهُ يَأْتِى يَوْمَ الْقِيَامَةِ شَفِيعًا لأَصْحَابِهِ اقْرَءُوا الزَّهْرَاوَيْنِ الْبَقَرَةَ وَسُورَةَ آلِ عِمْرَانَ فَإِنَّهُمَا تَأْتِيَانِ يَوْمَ الْقِيَامَةِ كَأَنَّهُمَا غَمَامَتَانِ أَوْ كَأَنَّهُمَا غَيَايَتَانِ أَوْ كَأَنَّهُمَا فِرْقَانِ مِنْ طَيْرٍ صَوَافَّ تُحَاجَّانِ عَنْ أَصْحَابِهِمَا اقْرَءُوا سُورَةَ الْبَقَرَةِ فَإِنَّ أَخْذَهَا بَرَكَةٌ وَتَرْكَهَا حَسْرَةٌ وَلاَ تَسْتَطِيعُهَا الْبَطَلَةُ ». قَالَ مُعَاوِيَةُ بَلَغَنِى أَنَّ الْبَطَلَةَ السَّحَرَةُ.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
குர்ஆனை ஓதிவாருங்கள். ஏனெனில், குர்ஆன் ஓதிவருபவர்களுக்கு அது மறுமையில் வந்து (இறைவனிடம்) பரிந்துரை செய்யும். இரு ஒளிச்சுடர்களான “அல்பகரா’ மற்றும் “ஆலு இம்ரான்’ ஆகிய இரு அத்தியாயங்களையும் ஓதிவாருங்கள்.

ஏனெனில், அவை மறுமை நாளில் நிழல்தரும் மேகங்களைப் போன்றோ அல்லது அணி அணியாகப் பறக்கும் பறவைக் கூட்டங்களைப் போன்றோ வந்து தம்மோடு தொடர்புள்ளவர்களுக்காக (இறைவனிடம்) வாதாடும்.

“அல்பகரா’ அத்தியாயத்தை ஓதிவாருங்கள். அதைக் கையாள்வது வளம் சேர்க்கும். அதைக் கைவிடுவது இழப்பைத் தரும். இவ்வத்தியாயத்திற்கு முன் சூனியக்காரர்கள் செயலிழந்துபோவார்கள்.

அறி: அபூஉமாமா அல்பாஹிலீ (ரலி)
நூல் : முஸ்லிம்-1470 

இந்த செய்தியில் பகரா மட்டும் பரகத் பெற்றுத்தரும் என்று வந்திருக்கிறது. இது மட்டுமில்லாமல் குர்ஆன் பரகத் பெற்றதுதான்.

وَهٰذَا ذِكْرٌ مُّبٰرَكٌ اَنْزَلْنٰهُ‌ؕ اَفَاَنْتُمْ لَهٗ مُنْكِرُوْنَ

இது பாக்கியம் நிறைந்த அறிவுரை. இதை நாமே அருளினோம். இதையா நீங்கள் மறுக்கிறீர்கள்?

(அல்குர்ஆன்: 21:50)

விரலை சூப்புதல்

முஸ்லிம்களில் சிலர் நவீன கலாச்சாரம் என்றபெயரில் ஹோட்டல்களில் சாப்பிடும்போது கைவிரல்களை சூப்பி சாப்பிடுவதில்லை. காரணம் பிறமதத்தவர்கள் அங்கே வந்திருக்கிறார்கள். அவர்கள் தவறாக நினைப்பார்கள் என்று ஒன்றுக்கும் ஒவ்வாத காரணத்தை சொல்லி இந்த சுன்னத்தை விட்டுவிடுகிறார்கள்.

கலாச்சாரத்தையும், அழகான ஒழுக்கங்களையும் கற்றுத்தந்த மார்க்கம் இந்த இஸ்லாம். இந்த மார்க்கம் கற்றுத்தந்த இந்த மார்க்கத்தில் அழகான நடைமுறைகளை விடுகிறார்கள். இவர்கள் எப்படி பரகத்தை பெருவார்கள்.?

عَنْ أَبِى هُرَيْرَةَ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- قَالَ
 إِذَا أَكَلَ أَحَدُكُمْ فَلْيَلْعَقْ أَصَابِعَهُ فَإِنَّهُ لاَ يَدْرِى فِى أَيَّتِهِنَّ الْبَرَكَةُ

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் உணவு உண்டால், அவர் தம் விரல்களை உறிஞ்சிக்கொள்ளட்டும். அவற்றில் எதில் வளம் (பரக்கத்) உள்ளது என்பதை அவர் அறியமாட்டார்.

அறி : அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம்-4140 

நல்லெண்ணம், மறுமையை முன்னிறுத்துதல்

இது அல்லாமல் நாம் வியாபாரம் உட்பட அனைத்து காரியங்களிலும் நல்லெண்ணத்தையும், மறுமையும் முன்னிருத்த வேண்டும்.

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم-
مَنْ كَانَتِ الآخِرَةُ هَمَّهُ جَعَلَ اللَّهُ غِنَاهُ فِى قَلْبِهِ وَجَمَعَ لَهُ شَمْلَهُ وَأَتَتْهُ الدُّنْيَا وَهِىَ رَاغِمَةٌ وَمَنْ كَانَتِ الدُّنْيَا هَمَّهُ جَعَلَ اللَّهُ فَقْرَهُ بَيْنَ عَيْنَيْهِ وَفَرَّقَ عَلَيْهِ شَمْلَهَ وَلَمْ يَأْتِهِ مِنَ الدُّنْيَا إِلاَّ مَا قُدِّرَ لَهُ

யாருடைய எண்ணம் மறுமையை நோக்கி இருக்கிறதோ அவருடைய உள்ளத்தில் அல்லாஹ், போதுமென்ற நிலையை உருவாக்கிவிடுவான். அவருடைய காரியங்களை ஒன்றுகூடச் செய்வான். உலகம் சரணடைந்து அவருக்கு ஓடிவரும்.

யாருடைய எண்ணம், உலகத்தை நாடி இருக்கிறதோ அவருடைய கண்ணுக்கு முன் ஏழ்மையை கொண்டு வருவான். அவருடைய காரியங்களை சிதறடித்து விடுவான். உலகத்தில் அவருக்கு ஏற்படுத்தப்பட்ட அளவு (மட்டும்) வரும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: திர்மிதீ-2465 (2389)

இந்த செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் யஸீத் பின் அபான் என்ற பலவீனமானவர் இடம் பெற்றாலும் தாரிமீ-235 (232) இல் ஆதாரப்பூர்வமாக இடம் பெற்றுள்ளது.

இஸ்திஃக்ஃபார் செய்தல்

இது அல்லாமல் அன்றாடம் நாம் இஸ்திஃக்ஃபார் செய்யவேண்டும். இஸ் திஃக்ஃபார் செய்வதின் மூலம் அனைத்து செல்வங்களும் ஓடிவருவதாக அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்.

فَقُلْتُ اسْتَغْفِرُوْا رَبَّكُمْؕ اِنَّهٗ كَانَ غَفَّارًا ۙ‏ يُّرْسِلِ السَّمَآءَ عَلَيْكُمْ مِّدْرَارًا ۙ‏ وَّيُمْدِدْكُمْ بِاَمْوَالٍ وَّبَنِيْنَ وَيَجْعَلْ لَّـكُمْ جَنّٰتٍ وَّيَجْعَلْ لَّـكُمْ اَنْهٰرًا ؕ‏

“உங்கள் இறைவனிடம் மன்னிப்புத் தேடுங்கள்! அவன் மன்னிப்பவனாக இருக்கிறான்” என்று கூறினேன். உங்களுக்கு அவன் தொடர்ந்து மழையை அனுப்புவான். செல்வங்கள் மூலமும், மக்கள் மூலமும் உங்களுக்கு உதவுவான். உங்களுக்காக சோலைகளை ஏற்படுத்துவான். உங்களுக்காக நதிகளையும் ஏற்படுத்துவான்.

(அல்குர்ஆன்: 71:10-12)

பரகத்திற்காக துஆ செய்தல்

இந்த அமல்களை செய்வதோடு நின்றுவிடாமல் நாம் வியாபாரம் போன்ற காரியங்களுக்கு முன் நபி (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த துஆவை ஓதிக் கொள்ள வேண்டும்.

 أَخْبَرَنِي جَابِرُ بْنُ عَبْدِ اللهِ السَّلَمِيُّ ، قَالَ :
كَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم يُعَلِّمُ أَصْحَابَهُ الاِسْتِخَارَةَ فِي الأُمُورِ كُلِّهَا كَمَا يُعَلِّمُ السُّورَةَ مِنَ الْقُرْآنِ يَقُولُ إِذَا هَمَّ أَحَدُكُمْ بِالأَمْرِ فَلْيَرْكَعْرَكْعَتَيْنِ مِنْ غَيْرِ الْفَرِيضَةِ ثُمَّ لِيَقُلِ اللَّهُمَّ إِنِّي أَسْتَخِيرُكَ بِعِلْمِكَ وَأَسْتَقْدِرُكَ بِقُدْرَتِكَ وَأَسْأَلُكَ مِنْ فَضْلِكَ فَإِنَّكَ تَقْدِرُ ، وَلاَ أَقْدِرُ وَتَعْلَمُ ، وَلاَ أَعْلَمُ وَأَنْتَ عَلاَّمُ الْغُيُوبِ اللَّهُمَّ فَإِنْ كُنْتَ تَعْلَمُ هَذَا الأَمْرَ ، ثُمَّ تُسَمِّيهِ بِعَيْنِهِ – خَيْرًا لِي فِي عَاجِلِ أَمْرِي وَآجِلِهِ- قَالَ ، أَوْ فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي – فَاقْدُرْهُ لِي وَيَسِّرْهُ لِي ثُمَّ بَارِكْ لِي فِيهِ اللَّهُمَّ وَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّهُ شَرٌّ لِي فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي ، أَوْ قَالَ فِي عَاجِلِ أَمْرِي وَآجِلِهِ – فَاصْرِفْنِي عَنْهُ وَاقْدُرْ لِيَ الْخَيْرَ حَيْثُ كَانَ ثُمَّ رَضِّنِي بِهِ.

ஜாபிர் பின் அப்தில்லாஹ் அஸ்ஸலமீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தம் தோழர்களுக்கு எல்லா விஷயங்களிலும் நல்லதைத் தேர்ந்தெடுக்கப் பிரார்த்திக்கும் முறையை (இஸ்திகாராவை), குர்ஆனின் அத்தியாயத்தைக் கற்றுக்கொடுப்பதைப் போன்று கற்றுக் கொடுத்துவந்தார்கள். அவர்கள் கூறுவார்கள்: உங்களில் ஒருவர் ஒன்றைச் செய்ய நினைத்தால், கூடுதலான (நஃபிலான) இரண்டு ரக்அத்கள் தொழுது கொள்ளட்டும். பின்னர் “இறைவா! நீ அறிந்துள்ளபடி (எது எனக்கு) நன்மை(யோ அ)தனை உன்னிடம் நான் கோருகிறேன். உனது ஆற்றலால் எனக்கு ஆற்றல் உண்டாக வேண்டுமென உன்னிடம் கோருகிறேன். உன் அருளைக் கோருகிறேன். ஏனெனில், நீயே ஆற்றல் மிக்கவன்; எனக்கோ எந்த ஆற்றலும் கிடையாது. நீயே நன்கறிந்தவன்;

இறைவா! இந்தக் காரியம் -(தான் தொடங்கப்போகும்) அந்தக் காரியம் இன்னதெனக் குறிப்பிட்டு – எனக்கு “என் இம்மை வாழ்விலும் மறுமை வாழ்விலும்’ அல்லது “என் மார்க்கத்திலும் என் வாழ்க்கையிலும் என் காரியத்தின் முடிவிலும்’ நன்மை பயக்கும் என நீ அறிந்திருந்தால் அதைச் சாதிப்பதற்குரிய ஆற்றலை எனக்கு வழங்கி, அதை சுலபமாக்கித் தருவாயாக! பிறகு அதில் எனக்கு பரகத் அளித்திடுவாயாக!

இறைவா! இந்தக் காரியம் எனக்கு “என் மார்க்கத்திலும் வாழ்க்கையிலும் என் காரியத்தின் முடிவிலும்’ அல்லது “என் இம்மை வாழ்விலும் மறுமை வாழ்விலும்’ தீமை பயக்கும் என நீ அறிந்திருந்தால் இந்தக் காரியத்தைவிட்டு என்னைத் திருப்பிவிடுவாயாக! நன்மை எங்கிருந்தாலும் அதை அடைவதற்குரிய ஆற்றலை எனக்கு வழங்கி, அதில் எனக்குத் திருப்தி அளித்திடுவாயாக!” என்று பிரார்த்திக்கட்டும்.

நூல்: புகாரி-7390 

இறையச்சம்

நம்முடைய காரியங்களில் இந்த அமல்களையும், துஆக்களை செய்வது மட்டுமில்லாமல் அனைத்து விஷயங்களிலும் தக்வாவை இறையச்சத்தை முன் னிறுத்த வேண்டும்.

وَلَوْ اَنَّ اَهْلَ الْقُرٰٓى اٰمَنُوْا وَاتَّقَوْا لَـفَتَحْنَا عَلَيْهِمْ بَرَكٰتٍ مِّنَ السَّمَآءِ وَالْاَرْضِ وَلٰـكِنْ كَذَّبُوْا فَاَخَذْنٰهُمْ بِمَا كَانُوْا يَكْسِبُوْنَ‏

அவ்வூர்களைச் சேர்ந்தோர் நம்பிக்கை கொண்டு (நம்மை) அஞ்சியிருந்தால் வானிலிருந்தும், பூமியிலிருந்தும் பாக்கியங்களை அவர்களுக்காக திறந்து விட்டிருப்போம். மாறாக அவர்கள் பொய்யெனக் கருதினர். எனவே அவர்கள் (தீமை) செய்து வந்ததன் காரணமாக அவர்களைத் தண்டித்தோம்.

(அல்குர்ஆன்: 7:96)

وَمَنْ يَّـتَّـقِ اللّٰهَ يَجْعَلْ لَّهٗ مَخْرَجًا
وَّيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ‌ ؕ وَمَنْ يَّتَوَكَّلْ عَلَى اللّٰهِ فَهُوَ حَسْبُهٗ ؕ اِنَّ اللّٰهَ بَالِغُ اَمْرِهٖ‌ ؕ قَدْ جَعَلَ اللّٰهُ لِكُلِّ شَىْءٍ قَدْرًا‏

அல்லாஹ்வை அஞ்சுவோருக்கு அவன் ஒரு போக்கிடத்தை ஏற்படுத்துவான். அவர் எண்ணிப் பார்த்திராத வகையில் அவருக்கு உணவளிப்பான். அல்லாஹ்வையே சார்ந்திருப்போருக்கு அவன் போதுமானவன். அல்லாஹ் தனது காரியத்தை அடைந்து கொள்பவன். ஒவ்வொரு பொருளுக்கும் அல்லாஹ் ஓர் அளவை நிர்ணயம் செய்துள்ளான்.

(அல்குர்ஆன்: 65:2,3)

நம் அனைவரையும், பரக்கத்தை அடைந்து, முஸ்லிமாக வாழ்ந்து, முஸ்லிமாக மரணிக்கிற நல்லடியார்களாக, அந்த ஏக இறைவன் ஆக்கி அருள்புரிவானாக!

அருள் வளம் (பரக்கத்) பெறுவது எப்படி?
யூசுப் பைஜி, கடையநல்லூர்